பத்திரப்பதிவு சாட்சிகள் 24.02.2020 முதல் புது கட்டுப்பாடு

சார் பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் போது, சாட்சியாக வருபவர்களுக்கு பதிவுத்துறையால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  

இதுவரையில் நடந்துவந்த நடைமுறை என்ன?
  • பத்திரப் பதிவின் போது, விற்பவர் தரப்பில் மற்றும் வாங்குபவர் தரப்பில், தலா ஒருவர் சாட்சியாக அந்த பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும் என்பது விதி. 
  • சில நேரங்களில் விற்பவர் தரப்பில் அல்லது வாங்குபவர் தரப்பில் சாட்சியாக யாரும் வராத நிலையில், இதற்கு முன்பு ஆவண எழுத்தர், அலுவலக ஊழியர்கள் யாராவது, சாட்சியாக கையெழுத்திடுவார்கள்.
  • அந்த சமயத்தில் அங்கு இருக்கின்ற வீடு, மனை விற்பனை செய்கின்ற புரோக்கர்களும் சாட்சியாக கையெழுத்து போடுவதுண்டு. 
சார் பதிவாளர் இதனை கண்டு கொள்வதில்லை. 

நடக்கும் முறைகேடு என்ன?
  • சார் - பதிவாளர் அலுவலகங்களில், சாட்சி கையெழுத்து போடுவதற்கென்றே, சிலர் அங்கு வலம் வருகின்றனர்.
  • தொடர்ந்து ஒரே நபர் பல பத்திரங்களில் சாட்சி கையெழுத்து போட்டு வருவது அங்கு வாடிக்கையாகி விட்டது.
  • இது, மோசடிக்கு வழி வகுப்பதாக உணர்ந்து, பத்திரப் பதிவுக்கான சாட்சிகள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய, புதிய கட்டுப்பாடுகளை, 
தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 

கட்டுப்பாடுகள் விபரம்
  1. சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் போது, சாட்சியாக வருவோரின் புகைப்படத்தையும், கைரேகையையும் அங்குள்ள அலுவலர்கள் பதிவு செய்ய வேண்டும்.
  2. சாட்சியாக கையொப்பம் இடுவோரின் அடையாள ஆவணத்தையும், அவர்கள் தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும். 
  3. தொடர்ந்து ஆறு பத்திரங்களுக்கு மேல் ஒரே நபர், சாட்சி கையெழுத்திட, சார் - பதிவாளர் அனுமதிக்கக் கூடாது.
  4. அப்படி ஒருவேளை அவசியம் ஏற்பட்டால், மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்ற பின், சம்பந்தப்பட்ட பத்திரத்தை சார் பதிவாளர் பதிவு செய்ய வேண்டும். 
இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
 
Top