பொது தகவல் அலுவலர் மீது ஓர் புகார் மனு


மதுரையில் உள்ள சார்பதிவாளர், தனது கடமையை சரியாக செய்யவில்லை என்று அது சம்பந்தப்பட்ட எனது நண்பர் ஒருவருக்கு கோபம். இதனை ஆர்.டி.ஐ. மூலமாக கேட்க வேண்டும். டைப் அடித்து தாருங்கள் என்று சென்ற மாதத்தில் ஓர் நாள் என்னிடம் வந்திருந்தார். நானும் டைப் செய்து கொடுத்தேன்.



பதிவுத்துறைத்தலைவர் சுற்றறிக்கை 



அதாவது, சொத்துக்களை சார்பதிவாளர் பதிவு செய்யும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை மூலமாக பதிவுத்துறைத்தலைவர் அறிவுறுத்தி உள்ளார். ஆனால், மதுரையில் உள்ள சார்பதிவாளர் ஒருவர் அதனை செய்யவில்லை. அது குறித்து சில தகவல்களை எனது நண்பர் தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)ன் கீழ் மதுரை பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களிடம் கேட்டிருந்தார்.



தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 7(1) என்ன சொல்கிறது?



ஒரு மனுதாரர் உரிய முறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்கும்போது, அதனை பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தகவல்களை அளிக்க வேண்டும்; அல்லது சட்டப்பிரிவு 8 மற்றும் 9-ல் குறிப்பிட்டுள்ளபடி தகவல்களை வழங்க மறுக்க வேண்டும் என்று உள்ளது. 


தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 7(3) என்ன சொல்கிறது?


மனுதாரர் கோருகின்ற தகவல்களை நகல் எடுத்து வழங்க வேண்டியது இருந்தால், அதற்குரிய கட்டணத்தை தெரிவிக்க வேண்டும் என்று பிரிவு 7(3)ல் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொது தகவல் அலுவலர் அளித்த தகவல்


பதிவுத்துறை இணையதளத்தை குறிப்பிட்டு நீங்கள் கேட்ட தகவல் அதில் இருக்கிறது. அதனை ஓப்பன் செய்து டவுண்லோடு செய்து கொள்ளுங்கள் என்று பொது தகவல் அலுவலர் தகவல் அளித்திருந்தார். 




இது சட்டப்படி தவறான தகவல் ஆகும். பிரிவு 7(3)ன்படி அவர் அதனை நகல் எடுத்து, அதற்குரிய கட்டணத்தை பெற்று மனுதாரருக்கு வழங்கி இருக்க வேண்டும். 



இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதா?


எனது நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. இப்படி பொறுப்பில்லாமல் பதில் அளிக்கிறார்களே, இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதா? என்று என்னிடம் மிகவும் ஆதங்கப்பட்டார். என்னிடம் இருந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட புத்தகத்தை எடுத்து கொடுத்தேன். வாசித்து பார்த்தார். முகம் மலர்ச்சி அடைந்தார். 
 
Top